search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்ப கால பிரச்சனை"

    • கர்ப்ப காலத்தில் பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான்.
    • பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம்.

    கர்ப்பம் என்பது பல புதிய உணர்ச்சிகள், அனுபவங்கள் மற்றும் சில பெண்களுக்கு சங்கடமான பக்க விளைவுகளுடன் வருகிறது. கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு இதுபோன்ற பொதுவான கவலைகளில் ஒன்று கர்ப்ப காலத்தில் பல் வலி.

    கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.

    இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

    கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?

    1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.

    2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள். பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.

    கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போல் பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ஈறு நோய்கள், ஈறுகளில் ரத்தம் மற்றும் சீழ் வடிதல் போன்றவை இயல்பாய் ஏற்படும். அவ்வாறு ஈறு நோய்கள் ஏற்பட்டால் டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். அது போல கர்ப்பிணி பெண்களுக்கு பல் சொத்தை எளிதில் ஏற்படும். அதற்கும் முறையான சிகிச்சை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.

    உங்கள் பல் மருத்துவரை அணுக முடியாவிட்டால், கிராம்புத் துண்டை மென்று சாப்பிடுவது அல்லது கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவது போன்ற எளிய வீட்டு வைத்தியங்களை நீங்கள் எப்போதும் முயற்சி செய்யலாம். பூண்டு கிராம்பைப் போலவே செயல்படுகிறது மற்றும் பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். வெதுவெதுப்பான உப்பு நீரில் கழுவுதல் ஈறுகளை ஆற்றவும், வாய்வழி பாக்டீரியாவைக் குறைக்கவும் உதவும்.

    கர்ப்ப காலத்தில் ஈறுகள் வீக்கமடைவது பொதுவானது மற்றும் இந்த காலங்களில் ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் ஆகியவற்றின் தீவிரத்தை குறைக்க வாய்வழி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    * நீங்கள் கடுமையான பல் வலியை அனுபவித்தாலும் வலி நிவாரணி மருந்தை மட்டும் பயன்படுத்த வேண்டாம். சில மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி குழந்தையை நேரடியாக பாதிக்கலாம்.

    * உங்களுக்கு ஏதேனும் வீக்கம் இருந்தால், சூடான அல்லது குளிர்ந்த பேக்குகளை வைக்க வேண்டாம், உடனடியாக பல் மருத்துவரை அணுகவும்.

    * நிவாரணத்திற்காக அதிகப்படியான கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் 1-2 சொட்டுகளை மட்டும் பயன்படுத்துங்கள்.

    * சூடான மற்றும் கடினமான சீரான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    * உங்கள் பல் மருத்துவரிடம் கேட்பதற்கு முன், எந்த ஜெல் அல்லது வாய்வழி களிம்புகளையும் பயன்படுத்த வேண்டாம்.

    * கடைசியாக ஆனால் வலியைப் புறக்கணிக்கவோ அல்லது துன்பப்படவோ வேண்டாம். உங்கள் பல் மருத்துவர் உங்களுக்கு வழிகாட்டுவார் மற்றும் உங்கள் துன்பங்களிலிருந்து விடுபட உதவுவார். உங்கள் பல் மருத்துவரைச் சந்திக்கும் போது உங்கள் எல்லா அறிக்கைகளையும் எடுத்துச் செல்வதை உறுதிசெய்யவும்.

    • கர்ப்ப காலம் என்பது மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய கால கட்டம்
    • கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள் மட்டும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

    கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பெண்கள் முதல் முறையாக கர்ப்பம் அடையும் பொழுது, நின்றால், நடந்தால், ஏதேனும் பொருளை குனிந்து நிமிர்ந்து எடுத்தால் கரு கலைந்து விடுமோ என்று பயந்து பயந்து தான் வேலை பார்ப்பர்.

    இவ்வாறு பயம் கொள்ளும் பெண்கள், மலம் கழிக்க இந்தியன் முறையான குத்துக்காலிட்டு மலம் கழிப்பதை மேற்கொண்டால் கரு கலைந்து விடுமோ என்று பயம் கொள்வதில் தவறு இல்லை; ஆனால் அந்த பயத்தை ஏற்படுத்தும் விஷயம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கர்ப்பிணிகள் முயலுதல் வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு இந்தியன் முறை டாய்லெட் பயன்படுத்துவது குறித்த பயத்தை போக்க உதவும் தகவல்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

    பொதுவாகவே மற்ற நாட்டவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட் முறையை பயன்படுத்தி, மலம் கழித்து உடலின் ஆரோக்கியத்தை கெடுத்து கொண்டு இருக்க, நம் நாட்டவர்கள் மட்டும் நமக்கே உரித்தான முறையில் அதாவது இந்தியன் கழிவறை முறையான குத்துக்கால் முறையில் மலம் கழித்து கொண்டு இருக்கிறோம்.

    வெஸ்டர்ன் முறையில் மலம் கழிக்க முயலுகையில் நமது உடல் உறுப்புகள் எந்த ஒரு அழுத்தத்தையும், மாற்றத்தையும் சந்திக்காமல் நேராக நிமிர்ந்த நிலையில், உட்கார்ந்தவாறே மலம் கழித்து விடலாம். ஆனால் இந்தியன் முறையில் நமது உடல் குறுக்கப்பட்டு, வயிறு மற்றும் குடல் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டு மலம் வெளியேற்றப்படுகிறது. உடலின் பாகங்களுக்கு வேலை கொடுக்கப்பட்டால் தான் அவை தொடர்ந்து இயக்க நிலையில் இருக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டியது அவசியம்.

    இந்தியன் முறையில் குத்துக்கால் இட்டு உட்கார, உடலின் தசைகள் மற்றும் குடல் பகுதிகள் நன்கு அழுத்தம் பெறுகின்றன. இந்த அழுத்தத்தால் குடல்களில் தேங்கியுள்ள கழிவுகள் முழுவதுமாக வெளியேறி உடல் தூய்மை அடைகிறது. இந்த இரண்டு முறைகளில் நமது இந்தியன் முறையில் தான் உடலில் சரியான இடங்களில் அழுத்தம் தானாகவே கொடுக்கப்பட்டு உடல் கழிவுகள் நீக்கப்படுகின்றன. இது மிகச்சிறந்த முறையாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள் மட்டும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; ஏனெனில் அது தான் கரு உருவாகி வளரும் கால கட்டம் ஆகும். இந்த காலத்தில் பெண்கள் குனிந்து நிமிரும் பொழுது, மலம் கழிக்க அமரும் பொழுதும் கூட அதிக கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். கர்ப்பிணிகள் கவனக்குறைவாக நடக்க நேர்ந்தால் கருவிற்கு ஆபத்து ஏற்படலாம்; ஆனால் கர்ப்பிணிகள் பயம் கொள்ளாமல் இந்தியன் முறை கழிவறையிலேயே மெதுவாக அமர்ந்து, மலம் கழித்து விட்டு மெதுவாக எழலாம்.

    கர்ப்பிணிகள் தாராளமாக இந்தியன் முறை கழிவறையை பயன்படுத்தலாம். இது எந்த வகையிலும் கர்ப்பிணிகளின் உடல் நலத்தை பாதிக்காது என்று கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் முதல் 3 மாதங்கள் அதீத ஜாக்கிரதையோடும், அடுத்ததடுத்த மாதங்கள் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

    கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு கழிவறை முறையையும் பயன்படுத்தலாம். அவரவர்களின் வசதிக்கு ஏற்ற முறையை மேற்கொண்டு பயன்படுத்தலாம். ஆனால், வெஸ்டர்ன் முறையோடு ஒப்பிடும் பொழுது இந்தியன் முறை கழிவறை சிறந்தது என்று கூறப்படுவதால், முடிந்த அளவு கர்ப்பிணி பெண்கள் இந்த முறையை பயன்படுத்தலாம். இந்தியன் முறை கழிவறையில், உட்கார உடல் பாகங்கள் அழுத்தத்தை சந்திப்பதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    கர்ப்பிணிகளின் உடலுக்கு இந்தியன் டாய்லெட் முறை எந்த ஒரு பாதிப்பையும் நல்காதது போல, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கும் எந்த ஒரு பிரச்சனையையும் இந்த கழிப்பறை முறை ஏற்படுத்தாது. கர்ப்பிணி பெண்கள் இந்தியன் முறை டாய்லெட் பற்றி இருக்கும் தங்களது பயத்தை, சந்தேகத்தை விட்டு ஒழித்து தாராளமாக இந்த முறையை பின்பற்றலாம்; இது தாய்க்கும் சேய்க்கும் மிகவும் பாதுகாப்பை வழங்கும் முறை ஆகும்.

    • சரும பராமரிப்புக்கு 'வைட்டமின் ஏ' அவசியமானது.
    • மேக்கப் பொருட்களில் முக்கியமானது காஜல்.

    கர்ப்பகாலத்தில் சத்துள்ள உணவு மற்றும் பாதுகாப்பான உடைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கும் கர்ப்பிணிகள், மேக்கப் போடுவதிலும் சற்றே எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். முக அழகை மேம்படுத்திக் காட்டுவதற்கு பலவிதமான மேக்கப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதில் உள்ள மூலப் பொருட்களைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். சில பொருட்களில் உள்ள ரசாயனக் கலவைகள், வயிற்றில் இருக்கும் கருவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்:

    மேக்கப் பொருட்களில் இருக்கும் பாராபென்ஸ், சோடியம் லாரில் சல்பேட், பித்தலேட்ஸ் போன்ற ரசாயனக் கலவைகள் உடல்நலத்துக்கு ஆபத்தானதாகும். எனவே இத்தகைய மேக்கப் சாதனங்கள் பயன்படுத்துவதை கர்ப்ப காலம் முடியும் வரை தவிர்க்கலாம். செயற்கை நிறங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் கொண்ட மேக்கப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது.

    சரும பராமரிப்புக்கு 'வைட்டமின் ஏ' அவசியமானது. ஆனால் சில அழகு சாதனப் பொருட்களில் செயற்கை ரெட்டினாய்டுகள் எனப்படும் வைட்டமின் ஏ-வின் கலவை பயன்படுத்தப்படுகிறது. மேலும், சருமத்தை பொலிவாக்கும் கிரீம்களில் காணப்படும் 'வைட்டமின் கே' ரத்தத்தை உறைய வைப்பதற்கு பயன்படுகிறது. இவை கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதுதவிர மேக்கப் பொருட்களில் கலக்கப்படும் காரீயம் மற்றும் பாதரசம் போன்ற பொருட்கள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

    மேக்கப் பொருட்களும், பாதுகாப்பான பயன்பாடும்: லிப்ஸ்டிக் (உதட்டுச் சாயம்): கர்ப்பிணிகள் சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனக் கலவைகள் வயிற்றுக்குள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு மாறாக தேன், ரோஸ் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலிய இயற்கை பொருட்களால் ஆன லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

    முக கிரீம்: முகத்துக்கு பூசும் கிரீம்களில் செயற்கையான பொருட்கள் அல்லது ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, 'ஹைபோஅலர்ஜெனிக்', 'வாசனை இல்லாத', 'இயற்கையான' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீம்களை தேர்ந்தெடுக்கலாம்.

    நெயில் பாலிஷ்: நகச் சாயத்தில் 'டோலுயீன்' எனும் ரசாயனக் கலவை பயன்படுத்தப்படுகிறது. இது சாப்பிடும்போது உடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலம் முடியும் வரை நகச் சாயத்தை முழுமையாக தவிர்த்து விடலாம்.

    காஜல் (மை): மேக்கப் பொருட்களில் முக்கியமானது காஜல். 'கண் மை' பிடிக்காத பெண்களே இல்லை. இயற்கையான முறையில் கற்பூரம், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'கண் மை' உபயோகிப்பது நல்லது. இது கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

    மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கலாம்:

    * கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் பருக்கள், தடிப்புகள் ஏற்பட்டாலும், கர்ப்பிணி பெண்களுக்கு உரித்தான பொலிவு, அவர்களுக்கு தனி அழகை ஏற்படுத்தும்.

    * ஆரோக்கியமான உணவும், பழங்களும், பச்சை காய்கறிகளும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும், அழகும் இயற்கையாகவே மேம்படும்.

    * கர்ப்ப காலத்தில் 100 சதவீதம் இயற்கையான மேக்கப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.

    • கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
    • கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது

    கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்களோடு, உடல் சில பிரத்யேக அறிகுறிகளை வெளிப்படுத்தி, சில அசௌகரியங்களுக்கு உட்படுவதையும் உணரலாம்.

    கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகள் வலிமிகுந்தவையாக இல்லாதிருப்பினும், பல நேரங்களில் அசௌகரியமாக உணர்வதற்கு இவையே முக்கிய காரணிகளாகும்.

    கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது. வேலை செய்யும் பெண்கள் குறிப்பாக நெடு நேரம் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வேலை செய்யும் பெண்கள் சிறிது சுடுநீரில் உப்பிட்டு அதில் பாதங்களை சிறிது நேரம் வைத்துக் கொண்டிருப்பது, பாதங்களை மேல்நோக்கி லேசாக அழுத்துவது போன்றவை அவர்களுக்கு தசை பிடிப்பு வராமல் தடுக்கக்கூடிய சிறு சிறு பயிற்சிகள் ஆகும் .

    'சோம்பல் முறிப்பது' என்ற உடலை 'ஸ்ட்ரெட்ச்' செய்யாமல் இருக்க வேண்டும் . அவ்வாறு செய்தால் தசைபிடிப்பிற்கான வாய்ப்பு அதிகம். அது தவிர வெயில் காலத்தில் ஏராளமான நீர்ச்சத்து உள்ள பழங்கள் , ஜூஸ் போன்றவையும் அல்லது எதுவுமே பிடிக்காவிட்டாலும் வெறும் தண்ணீரையாவது அடிக்கடி குடித்து கொண்டே இருப்பது மிகவும் முக்கியமாகும்.

    அழுத்தம் தரக்கூடிய சூழல்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனெனில், உடலில் ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பை அதிகமாக்கக்கூடிய முக்கிய காரணங்களுள் மன அழுத்தமும் ஒன்று. மனதை அமைதியாக வைக்கக்கூடிய, இசையை ரசிப்பது போன்ற எளிய வழிமுறைகள் மூலம் எப்போதும் மனமகிழ்வோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வேலைப்பளுவைக் குறைத்து, மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஹை ஹீல்ஸ் எனப்படும் குதியுயர்ந்த செருப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சில குறிப்பிட்ட மருந்துகள் குறிப்பாக மெக்னீசியம் உள்ள மருந்துகள் இந்த தசைப் பிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. அத்துடன் கால்சியம் மாத்திரைகளையும் சரிவர எடுத்துக் கொள்ளும் பொழுதும் இந்த தசை பிடிப்புக்கான வாய்ப்பு குறையும்.

    தசைப்பிடிப்புகளை எவ்வித சிரமுமின்றி குணமாக்க, தினமும் உணவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழங்கள், அதிக பொட்டாசியச் சத்து கொண்டவையாகக் கருதப்படுகின்றன. உடலின் கால்சியத் தேவைகளுக்கு, வஞ்சிர மீன் வகைகள், பச்சை இலைகள் நிறைந்த காய்கறிகள், பாதாம் பருப்பு, பால் பொருட்கள் மற்றும் நெத்திலி மீன் வகைகளை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்.

    தொழில்முறை வல்லுநர் ஒருவரால் தரப்படும் மசாஜ், கர்ப்பப்பைத் தசைகள் மற்றும் தசைநார்கள், கெண்டைக்கால் பின் தசைகள் மற்றும் கால் தசைகளைத் தளர்த்தி, தசைப்பிடிப்புகளை நீக்கக்கூடியதாகும். தினமும் ஒரு வேளை இவ்வாறு மசாஜ் செய்து வந்தால், வலி மற்றும் அசௌகரியத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

    • இந்தியாவில் பெண்களுக்கு சராசரியாக 47 வயதில் கருமுட்டை உற்பத்தியாவது நின்று விடுகிறது.
    • குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணம் என்று முந்தைய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

    பிரசவம்... ஒரு தாயின் மறுபிறப்பாக கருதப்படுகிறது. ஆனாலும் மருத்துவ வளர்ச்சி பெறாத காலத்தில் பிள்ளை பிறப்பு என்பது இறைவன் அளிக்கும் பரிசாக கருதப்பட்டது. இதனால் அப்போது ஒரு வீட்டில் 10 பிள்ளைகள், 12 பிள்ளைகள் என்பது சாதாரணமாக இருந்தது.

    இதன் விளைவாக 2017-ம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கள் தொகை 133.92 கோடியாக பெருகியது. அது நாட்டிற்கு பெரும் சவாலாக அமைந்தது. எனவே இந்திய அரசு 1964-ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகம் செய்தது. அது குறித்த விழிப்புணர்வும் பரவியது. இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது 2 குழந்தைகள் தான் இருக்கிறார்கள்.

    ஆனாலும் மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனாவை இந்தியா 2027-ம் ஆண்டு முந்தி விடும் என்று ஐ.நா. கணித்து உள்ளது. அதற்கு ஏற்றாற் போல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13-வதாக ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தது.

    இதை அறிந்த மருத்துவ குழுவினர் அந்த தம்பதிக்கு குடும்ப கட்டுப் பாடு அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்பிறகு அந்த ஆணுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் 17 சதவீதம் குறைந்து உள்ளது. இதனால் மக்கள் தொகையில் 2-ம் இடத்தில் உள்ள இந்தியா குழந்தையின்மையில் முதலிடத்தில் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சினையால் 27.5 மில்லியன் தம்பதிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மெட் டெக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி 2019-ல் கருத்தரித்தல் விகிதம் என்பது 2.2 -ல் இருந்து 2.0 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற பகுதிகளில் 6 தம்பதிகளில் ஒரு தம்பதி குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

    அது போல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கருத்தரித்தல் விகிதம் 1.8 ஆக குறைந்து உள்ளது. இதற்கு அந்த மாநிலங்களில் கல்வி அறிவில் முன்னேறி இருப்பது காரணமாக கூறப்படுகிறது.

    ஆனால் உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் கருத்தரித்தல் விகிதம் 2.3 ஆக உள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் தென்மாநிலங்களின் பங்கு 19.8 சதவீதமாகவும், வட மாநிலங்களின் பங்கு 43.2 சதவீதமாகவும் உள்ளது.

    திருமணமான தம்பதிகளில் 46 சதவீதம் பேருக்கு குழந்தையின் மை பிரச்சினை இருப்பதாகவும், 31 - 40 வயதுக்கு உட்பட்ட 63 சதவீத தம்பதிகளுக்கும், 21 - 30 வயதுக்குட்பட்ட 34 சதவீத தம்பதிகளுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    நவீன தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களால் ஒவ்வொருவரும் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் உணவு முறை, வேலைப்பளு, திருமண வயது அதிகரிப்பு, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு குழந்தையின்மை அதிகரித்து வருகிறது.

    மற்ற நாடுகளில் திருமண வயது 23 முதல் 25 வரை உள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 என மிக குறைவாக உள்ளது . இதனால் பெண்களின் மகப்பேறு காலம் அதிகரிக்கிறது.

    பொதுவாக பெண்கள் 21 வயது முதல் 27 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படுவது இல்லை. ஏனென்றால் இந்தியாவில் பெண்களுக்கு சராசரியாக 47 வயதில் கருமுட்டை உற்பத்தியாவது நின்று விடுகிறது. எனவே வயது அதிகரிக்கும் போது இயல்பாக கருத்தரிப்பது கூட சவால் நிறைந்ததாக மாறி விடுவதாக மகப்பேறு மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

    ஆனால் கடந்த 15 வருடங்களாக வேலை உள்ளிட்ட காரணங்களால் திருமண வயது தாண்டிய பிறகே திருமணம் செய்யும் நிலை உருவாகி வருகிறது. வயது அதிகமாகும் போது கருப்பை தனது சீரான செயல்பாட்டை செய்யாமல் இருப்பதாலும், குழந்தைப் பேறை தம்பதிகள் திட்டமிட்டு தள்ளிப்போடுவதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கி விடுகிறது.

    குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணம் என்று முந்தைய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆண்களின் மலட்டுத்தன்மையும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, நீண்ட கால புகைப்பழக்கம், மது, உயிரணுக்கள் குறைவு, பரம்பரை ரீதியான குறைபாடு உள்ளிட்டவை குழந்தைப்பேறை உண்டாக்குவதில் மிகப்பெரிய தடையாக இருக்கிறது.

    இதற்கு தீர்வு கண்டு குழந்தை பேறுக்காக கருமுட்டை உருவாக்குதல், கருப்பையின் உள்ளே விந்தணுவை செயற்கையாக உட்செலுத்துதல், விந்தணுவை கருமுட்டையில் நேரடியாக வைத்தல், சோதனைக்குழாய் உள்ளிட்ட முறைகளை பலரும் நாடுகின்றனர். இதனால் செயற்கை கருத்தரித்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை ஒழுங்குபடுத்த மகப்பேறு சிகிச்சை வழங்கும் சேவைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவை நிறைவேற்றி உள்ளது.

    குழந்தை பிறப்பு என்பது தம்பதிகள் இடையே எழும் இயல்பான உணர்வால், உறவால் நிகழும் ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று குழந்தை பிறப்பு சவால் நிறைந்ததாக மாறி இருக்கிறது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் குழந்தையின்மை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருவது வினோதமான முரணாகவே பார்க்கப்படுகிறது.

    • நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    • துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    கர்ப்பகாலத்தின் ஹார்மோன்கள், இன்சுலின் செயல்பாட்டை எதிர்த்து, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை, கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கிறார்கள். இது பொதுவாக கர்ப்பத்தின் 24 முதல் 28-வது வாரங்களுக்கு இடையில் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    *கார்போஹைட்ரேட் மிக அதிகமாக உள்ள உணவுகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து, கோதுமை, தினை, சோளம் போன்ற தானிய வகைகளை உட்கொள்ள வேண்டும்.

    *நன்கு வேக வைத்த பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    *பால், மீன், முட்டையின் வெள்ளை, போன்ற புரதங்கள் மற்றும் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவாக உள்ள கொய்யா, மாதுளம், சாத்துக்குடி, ஆரஞ்சு, அத்திப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம்.

    *நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும் சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு போன்ற பாலூட்டிகளின் இறைச்சி), பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், சோடா, பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    *தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    *ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

    *மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றையும் செய்யலாம்.

    *துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    நீரிழிவு நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பனிக்குடநீர் அதிகமாக இருப்பதால் கருக்கலைப்பு ஏற்படும் அபாயம், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இல்லாதபோது அதிகரிக்கிறது.

    • மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
    • தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

    கருவுற்றிருக்கும் பெண், அதிலும் குறிப்பாக முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு கர்ப்பம் குறித்து மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம். இது பலவிதமான உணர்ச்சிகளையும், கவலைகளையும் கொண்டு வரலாம். ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பற்றி கவலைப்படுவது ஒரு மோசமான விஷயம் அல்ல, ஏனெனில் இது புதிய சவால்களை எதிர்கொண்டு நடவடிக்கை எடுக்க மக்களைத் தள்ளும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்..

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மனரீதியானவை. இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எதிர்பார்ப்புள்ள தாய்மார்களையும் மன அழுத்தம் கடுமையாக பாதிக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்தால், தாய் மற்றும் குழந்தை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அடிப்படையில் இது உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக பலவீனப்படுத்துகிறது. இருப்பினும், மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, சுமூகமான மற்றும் ஆபத்து இல்லாத கர்ப்பத்திற்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    சீரான முறையில் சுவாசிக்க:

    சுவாச முறைகள் மன அழுத்தத்தால் கணிசமாக பாதிக்கப்படுகின்றன. இதன் பொருள் நீங்கள் குறைவாக சுவாசிக்கிறீர்கள். இது உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இதனால் உங்கள் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும். கர்ப்ப காலத்தில் சரியாக சுவாசிக்கவும் மற்றும் உட்கார்ந்து அல்லது படுத்து, கண்களை மூடி சுவாசிக்க வேண்டும். நீங்கள் கவலையாக உணரும் போதெல்லாம் குறைந்தது ஐந்து ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நிம்மதியான நித்திரை:

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தம் காரணமாக தூங்குவதில் சிரமம் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் மனச்சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகம். உங்களுக்கு போதுமான தூக்கம் வராவிட்டால், உங்கள் உடலும் மனமும் விரைவாக ஆற்றலை இழக்கின்றன. குறிப்பாக அழுத்தத்தில் இருக்கும்போது. ஏனெனில் அது எதிர்மறையான எண்ணங்களுக்கும் வழிவகுக்கிறது. உங்களுக்கு இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால், பகலில் சிறிது நேரம் தூங்க முயற்சிக்கவும்.

    உடற்பயிற்சி:

    மன அழுத்தத்தின் போது வெளியாகும் ஹார்மோன்கள் உங்கள் தசைகளை பதற்றம் மற்றும் சுருங்கச் செய்யும். கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனையை சமாளிக்க, உடலில் உள்ள பதற்றத்தை குறைக்க, இது ஒரு சிறந்த நுட்பமாகும். நீங்கள் பதற்றமாகவோ அல்லது பதட்டமாகவோ உணர்ந்தால், உங்கள் கழுத்து, முதுகு, கைகள் மற்றும் கால்களை நீட்டி சில நிமிடங்கள் செலவிடுங்கள். உங்கள் இடது காது உங்கள் இடது தோள்பட்டைக்கு அருகில் இருக்கும்படி உங்கள் தலையைத் திருப்புங்கள். மேலும் உங்கள் கழுத்தை நீட்டவும். இந்த நிலையில் 20 வினாடிகள் இருங்கள்.

    மிளகுக்கீரை சாப்பிடவும்:

    புதினா இலைகளில் மெந்தோல் என்ற பொருள் உள்ளது. இது தசை பதற்றத்தை குறைக்கிறது. இதை குடித்தால் அழுத்தம் குறையும். புதினா வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை நீக்குகிறது. நீங்கள் எங்கிருந்தாலும் மன அழுத்தம் மற்றும் வயிற்று பிரச்சனைகளை குறைக்க மிளகுக்கீரை மிகவும் உதவியாக இருக்கும்.

    • கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
    • இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும்.

    இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin B) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்த சோகை ஏற்படுகிறது.

    உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை 'இரத்த சோகை நோய்' என்கிறார்கள்.

    கர்ப்பக்காலத்தில் ஆரோக்கியமாக இருந்தால் தான் குழந்தையும் பிரசவ நேரத்தில் தாயும் நலமாக இருக்கமுடியும். கர்ப்பக்காலம் முழுவதுமே சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு நேரலாம். ஆனால் குறையவே கூடாது என்று சொல்லகூடிய சத்து என்றால் அது இரும்புச்சத்து தான். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சத்து குறைபாடு கொண்டிருக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது.

    கர்ப்பகாலத்தில் அவசியமான சத்துகளில் முதன்மையானதும் முக்கியமானதும் இரும்புச்சத்து தான். கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். இதனால் பிரசவக்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும்.

    கர்ப்பக்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை காக்க அதிகப்படியாக உடல் உறுப்புகள் வேலை செய்கின்றன. அதனால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அளவு இரும்புச்சத்து தேவையாக இருக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருள்கள் மற்றும் மாத்திரைகள் வழியாக இவை பூர்த்தியடயாத போது கர்ப்பிணிகள் இரத்த சோகை பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.

    இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வெள்ளை அணுக்களின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. மேலும் வைட்டமின் பி, ஃபோலிக் ஆசிட் சத்தும் குறையும் போது இரத்த சோகை மேலும் தீவிரமாகிறது. இதை அலட்சியப்படுத்தும் பெண்கள் கர்ப்பக்காலம் முழுவதுமே இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் சமயத்தில் அது குழந்தையின் உயிரையோ அல்லது தாயின் உயிரையோ பறித்துவிடும் வாய்ப்பும் உண்டு என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

    பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.

    மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.

    இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

    இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

    • எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை.
    • தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 40-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை. இதனால் குழந்தை இல்லாத தம்பதியினர் தனியார் கருத்தரித்தல் மையங்களை நாடுகின்றனர்.

    எனவே தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதோடு அங்கு சிகிச்சை பெற அதிக அளவு பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் சராசரி குடும்பத்தினர் கடனாளி ஆவதோடு மனச்சுமை மட்டுமின்றி பொருளாதார சுமைக்கும் ஆளாகின்றனர்.

    எனவே தமிழகத்தில் அதிக நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் அந்த அரசு மருத்துவமனைகளில் கூட செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி இல்லாதது கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

    எனவே அரசு மருத்துமனைகளில் ஐ.வி.எப்., விந்தணு ஊசி, கரு வங்கி, கருமுட்டை மற்றும் விந்தணு வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை கருத்தரிப்பு மையம் செயல்படுகிறது. அதுபோல் கடந்த ஆண்டு தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் ஆகும் பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் மகப்பேறு கால உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே அரசு மருத்துவ மனைகளில் தான் அதிகப்படியான பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசின் ஊக்கத்தொகையும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படுவதால் பலரும் மேலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

    ஆனால் அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்க தேவையான ஆய்வுக்கூட வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையே நீடிக்கிறது. அதில் ஆய்வக வசதிகளை செய்தால் குழந்தைக்காக ஏங்கும் ஏழை, எளிய தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் பயன் அடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    • சில மூட்டுவலி மருந்துகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பற்றவை.
    • கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிக முக்கியம்.

    கர்ப்பம் தரிப்பது மகிழ்ச்சியான, உற்சாகமான ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மன அழுத்தமாகவும் மாறிவிடக்கூடும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூட்டுவலி (Rheumatoid Arthritis) இருப்பது கண்டறியப்பட்டால் இப்படி ஏற்படலாம். இது ஒரு நாள்பட்ட ஆட்டோ இம்யூன் நோய். இது மூட்டுகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வலி, வீக்கம், விறைப்புத்தன்மை போன்றவை ஏற்படலாம்.

    மூட்டுவலி என்பது மூட்டு திசுக்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. மூட்டு வலி உள்ள கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் இந்த ஆன்டிபாடிகள் அசாதாரண அளவுகளில் காணப்படுகின்றன. இந்தப் பெண்களின் கருவிலும் இந்த ஆன்டிபாடிகள் குறைந்த அளவில் உள்ளன. இந்த நிலை, ருமாடிக் பரேசிஸ் (rheumatic paresis) அல்லது பிறவி மூட்டுவலி சார்ந்த கோளாறு என்றும் அறியப்படுகிறது. இது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளை பாதிக்கிறது.

    மூட்டுவலி உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, நோயெதிர்ப்பு சார்ந்த கோளாறின் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் வளராமல் தடுக்கப்படும். குழந்தைகளுக்கு வெளிப்படும் அறிகுறிகளைப் போன்ற சில அறிகுறிகள் காணப்படுவதால் டைப் 1 நீரிழிவு நோய் (பருவமடையும் காலத்தில் தோன்றும் வகை 1 நீரிழிவு நோய்) அல்லது லுகேமியா போன்ற நோய்கள் ஏற்படலாம்.

    கர்ப்பத்தின் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு முன்பே தாய்க்கு மூட்டுவலிக்கான அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், அது கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதாவது, கர்ப்பம் தரிக்கும் முன் ஒரு பெண்ணிடம் மூட்டுவலி கண்டறியப்பட்டாலும், மகப்பேறு விடுப்பு எடுக்கத் தொடங்கும்போதுதான், அவர் தீவிரமாக பாதிக்கப்படத் தொடங்குவார். அந்த நேரத்தில், அவர் குழந்தையை முழுநேரமாக கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், வீட்டிற்கு வெளியே எந்த வேலையையும் அவரால் செய்ய முடியாது.

    இந்த நிலை நிச்சயமாக கர்ப்பத்தை மிகவும் சவாலானதாக மாற்றும் என்றாலும், முறையான மேலாண்மையும் கவனிப்பும் இருந்தால், மூட்டுவலி உள்ள பெண்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தையும் ஆரோக்கியமான குழந்தையையும் பெற முடியும் என்பதை அறிவது அவசியம்.

    கர்ப்ப காலத்தில் மூட்டுவலியின் தாக்கத்தை குறைக்க, எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவருடன் தொடர் ஆலோசனை பெறுவது அவசியம். மூட்டுவலிக்கான அறிகுறிகளை நிர்வகிக்கவும், வளரும் கரு மீது மூட்டுவலிக்கான மருந்துகள் ஏற்படுத்த சாத்தியமுள்ள பக்கவிளைவுகளை கண்காணிக்கவும் எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர் உதவுவார். இதற்கிடையில், மகப்பேறு மருத்துவர் கர்ப்பத்தை கண்காணித்து, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்வார்.

    சில மூட்டுவலி மருந்துகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பற்றவை. அது வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பான, பயனுள்ள சிகிச்சைத் திட்டத்தைக் கண்டறிய, எலும்பு மூட்டு மருத்துவ நிபுணரிடம் தொடர் ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.

    கூடுதலாக, கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது கருவின் மீது தாக்கத்தை குறைக்க உதவும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் ஆகியவற்றை பின்பற்றுவது பயன் தரும்.

    *வழக்கமான உடற்பயிற்சி: மூட்டு வலிக்கான அறிகுறிகளைக் குறைக்கவும், உடல் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் இது உதவும். மனநலனுக்கும் உடற்பயிற்சி நன்மை சேர்க்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இது மூட்டுவலி அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். யோகா, நீச்சல் அல்லது நடைப்பயிற்சி போன்ற மென்மையான நடவடிக்கைகள் கர்ப்ப காலத்தில் செய்ய உகந்தவை.

    *சமச்சீர் உணவு: கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிக முக்கியம். ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் கொழுப்பு குறைந்த புரதங்களை உள்ளடக்கிய சீரான உணவை உண்பது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக கொழுப்புள்ள இறைச்சி போன்ற மூட்டுவலி அறிகுறிகளைத் தூண்டக்கூடிய உணவு வகைகளைத் தவிர்ப்பதும் முக்கியம்.

    *மன அழுத்த மேலாண்மை: தியானம், ஆழ்ந்த சுவாசம் மற்றும் மைண்ட்புல்னெஸ் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களும் மூட்டுவலி அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். மன அழுத்தம் மூட்டுவலியைத் தூண்டும். எனவே கர்ப்ப காலத்தில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிகளை கண்டுபிடிப்பது முக்கியம்.

    • காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகளை உண்ணலாம்.
    • முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

    கர்ப்ப காலத்தில் பெண்கள், குழந்தையின் நலனையும் சேர்த்து ஆரோக்கியமான உணவினை உண்ண வேண்டும். இக்காலத்தில் இரும்புச்சத்து, கால்சியம், போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் தாய் மற்றும் சேய் இருவரின் நலனுக்கும் நன்மை பயக்கும். முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

    மலச்சிக்கல் ஏற்படாதவாறு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகள் போன்றவற்றை உண்ணலாம். எளிதில் உணவுச் செரிமானம் ஏற்பட சீரகப்பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். குமட்டல், வாந்தியை நீக்க மாதுளை பழச்சாறு, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    இவற்றுடன் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பாவன பஞ்சாங்குல தைலத்தினை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.மேலும் உளுந்து தைலம், குந்திரிக தைலம் போன்றவற்றை இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் தடவி வரலாம். இவை சுகமகப்பேற்றிற்கு உதவி செய்யும்.

    மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களின் உடல் இயல்பான பலமாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும்.மேலும் இக்காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உளுந்து, வெந்தயம், வெள்ளைப் பூண்டு, பாதாம் பருப்பு இவை பால்சுரப்பிற்கு சிறந்த உணவாகும்.

    இவற்றுடன் சித்த மருந்துகளான சவுபாக்ய சுண்டி லேகியம் சதாவேரி லேகியம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை பிரசவத்திற்கு பின்னரான உதிரப்போக்கினை சீராக்குவதுடன், பால் சுரப்பினையும் தூண்டுவிக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் உடலில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரித்தல், பித்தப்பைக் கல் போன்றவை மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களில் காணப்படுகிறது.

    எனவே மைதா மற்றும் எண்ணையில் பொரித்த உணவுகளைத் தவிர்த்தல், சரியான நேரத்தில் அளவுடன் உணவு அருந்துதல், உணவில் பூண்டு, மஞ்சள், பீட்ரூட், கேரட், பப்பாளி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் இவற்றுடன் சித்த மருந்துகளான ஏலாதி, நெருங்சில், கீழாநெல்லி, கிச்சிவி மணப்பாகு போன்றவற்றை மருத்துவரின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்ளுவதால் பித்தப்பை கல்லினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து வெளிவரலாம்.

    • கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் பராமரிப்பு அவசியம்.
    • காலை, இரவு என இரு வேளையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    உடலின் ஆரோக்கியத்தைப் போலவே, பற்களின் ஆரோக்கியமும் முக்கியமானது. அதிலும், கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் பராமரிப்பு அவசியம். கர்ப்ப காலத்திற்கு முன்னும், கர்ப்ப காலத்திலும் பற்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து சில ஆலோசனைகள் இதோ:

    கர்ப்ப காலத்தில் சீரான இடைவெளியில் உடலைப் பரிசோதனை செய்து கொள்வது போல, பற்கள் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா? என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அதிலும், தாய்மைக்குத் தயாராகும் முன்னரே பெண்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதில், பற்களில் பிரச்சினை, சொத்தை ஏதேனும் உள்ளதா, ஈறுகளின் நிலை எப்படி இருக்கிறது என அறிய வேண்டும்.

    பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்தால், உடனடியாக அதைச் சரி செய்வதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வது சிறந்தது. இது, பேறு காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும். ஆனால், இந்தச் சமயத்தில் பற்களைக் கவனிக்காமல் விடும்போது, கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களுக்கு, பற்களில் ஏற்படும் பிரச்சினைக்கான சிகிச்சையோ, மருந்தோ எடுத்துக் கொள்ள முடியாது. தற்காலிக நிவாரணியாக வலி மருந்தை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

    அதேபோல், 21 வயதில் பலருக்கும் ஞானப்பற்கள் முளைக்கும். இது சில சமயங்களில் தொந்தரவு தரக்கூடும். கர்ப்ப காலத்தில் அந்தப் பிரச்சினை ஏற்பட்டால், அந்தப் பல்லை நீக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே முன்பே இதை மருத்துவரிடம் காண்பித்து குணப்படுத்துவது அவசியம்.

    ஈறு சார்ந்த பிரச்சினைகள்: பெண்களுக்குப் மகப்பேறு காலத்தில் ஹார்மோன்களில் மாறுதல் ஏற்படும். இதனால், ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவற்றை அலட்சியம் செய்யாமல், உடனடியாகப் பல் மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை பெற்று ஆரம்ப நிலையிலேயே ஈறு பிரச்சினையைச் சரி செய்ய வேண்டும்.

    பற்களின் பராமரிப்பு: சாப்பிடும் போது உணவுத் துகள்கள் வாயில் தங்கிவிடும் வாய்ப்புள்ளது. இதனால் கிருமிகள் பெருகி பல் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகும். இதைத் தவிர்க்க காலை, இரவு என இரு வேளையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தரமான பற்பசையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஈறுகளுக்கு உறுதி சேர்க்கும் வகையில், தினமும் வைட்டமின் 'சி' சத்து நிரம்பிய ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம். கர்ப்ப காலத்தில் இனிப்பு சார்ந்த உணவுப் பண்டங்கள் மீது ஈர்ப்பு இருக்கும். இனிப்பு வகைகளை சாப்பிட்டால், உடனடியாக வெதுவெதுப்பான வெந்நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

    ×